மகளாய் வந்தாய் தாயே வாழி
மகளின் சேயாய் வருவோய் வாழி
தரும ஆழி உருவோய் வாழி
கருமம் பாழ்செய வல்லோய் வாழி
சுயம்பு எந்தா யுமானாய் வாழி
நடுநடு நடுவாம் இருதயீ வாழி
சுயமென் தன்மை மீட்டாய் வாழி
முழுமெய்ஞ் ஞான குருவே வாழி
சுயமென் தன்மை = என் தனித்தன்மை
வரைய வொணாத எந்தாய் வாழி
வரையறை யற்றாய் என்தாய் வாழி
சிறுகுடில் மெய்யுள் ளடக்கம் வாழி
கருமனப் புன்மைக் கடங்காய் வாழி
அணுத்துகள் உயிருக் குயிராய் வாழி
அகண்டுள உயிர்நிலை யதுவே வாழி
ஞான வாலை மகளே வாழி
ஞானச் சேயாய் வருவோய் வாழி
ஈனன் என்னை உய்த்தாய் வாழி
நாகென் இருதய வாயே வாழி
இல்லான் என்றன் இல்லாள் வாழி
எல்லாம் வல்லாள் நல்லாள் வாழி
சொல்லின் செல்வந் தந்தாய் வாழி
சொல்லைக் கடந்தமெய்ப் பொருளே வாழி
ஒன்று மில்லேன் என்றன் மெய்க்கு
ஒன்றே மெய்யாம் என்றாய் வாழி
ஒன்றே மும்மை மூலம் என்ராய்
நெஞ்ச நடுவுள் ளீடே வாழி
பாமரன் என்னைப் பா மரன் ஆக்கிச்
சாமரம் வீசுந் தாயே வாழி
சா மரம் ஆகி வீழா வண்ணம்
பூரண ஞானந் தந்தாய் வாழி
நன்றி சொல்லும் நாயாய் நானுஞ்
சொல்லை வாலாய் ஆட்டுவேன் தாயே
அச்சொலுந் தந்தாய் நாயகி நீயே
அடைக்கலம் நீயே தாயே வாழி
அமர மடியைத் தந்தோய் வாழி
அமர்த்தி மடியில் மடியும் மடியை
அகற்றி அகண்ட விழிப்பைத் தந்தே
அகத்தே இருதயத் தீர்த்தாய் வாழி
வானற மகனாய் வந்தாய் வாழி
மார்நடு பிளந்து இருதய வாய்மை
பேசா தோதிய சிரஞ்ஜீவி வாழி
தாய்தந் தைகுரு தேவே வாழி
வானறம் அறியா மனித மிருகம்
பூரண ஞானம் எளிதில் பெறவே
வாலை யுன்னை வாழ்த்தும் நடுநிலை
யாந்திரு வித்தை தந்தாய் வாழி
வானறம் = அரும்பெருந் தருமம், அருட்பெருந் தருமம்
பரம ரகசியம் பகிரங் கமாக
அரிய வானறம் தந்தாய் வாழி
முழுமெய்ஞ் ஞானம் எம்முயிர் உரிமை
முழங்கிப் பெருவாழ் வளித்தாய் வாழி
சுயம்பு என்னும் நற்சொல் தந்தே
சுயமென் தன்மை மெய்வழி உய்ந்தே
நிச்சய நித்திய சத்திய முந்நிலை
எய்திட இருதயந் திறந்தாய் வாழி
சுயமென் தன்மை சுயம்பில் உயவே
அகநடு இருதயந் திறந்தாய் வாழி
சகத்தில் இருக்கும் என்னை ஈர்த்தே
நவகண மதனுள் ஒளித்தாய் வாழி
என்னைச் சரியாக்க எல்லாஞ் சரியாகத்
தன்னை அளித்த அன்னே வாழி
மன்னும் முந்நிலை யான்பெற சுயம்பு
என்னுந் தன்னிலை திறந்தாய் வாழி
No comments:
Post a Comment