*சுயம்பு*
சோம்பு'ம் மனதை சீரகம் செய்யும். அஞ்ஞானமிளகு'ம்.. ஆன்மிகச் சிந்தனை கடுகு'ம்..
சுயம் பூண்டு ஒழுக, சத்தியம் நெஞ்'சுக்கு வசம்பு'கும்.
வெங்காயப் பிறவிக் கடலை மெய்ஞ்ஞான இரத்தினக் கற்கண்டு கைக்கொண்டு கடக்கச்செய்யும்..
சுருங்கச் சொல்லின் குழம்பு'ம் வாழ்வை ரசமாக்கும் பாயசமே சுயம்பு..
(வழமையான உளறல் இது. பொருளுரை நல்கும் பொறுப்பு நாகிற்கே..!)
திருமிகு ராஜாவின் பதிவு
_________________________
சமைத்து உண்ணுஞ் சுயமெனுங் கல்லை
சமைத்துப் பண்ணும் சுயம்பின் ரச வாதம்
சமையலறை திறந்து நம் வசம் பாய
சம்பூர்ணமாகத் திருமிகு ராஜா தானமிட்ட
'அன்னம்' வாழி!
உயிரை உறிஞ்சும் ஒட்டுண்ணி மனம் வாதம், விவாதம், விதண்டாவாதஞ் செய்து சோம்பும். வாத தோஷம் நீங்க பெருஞ்சீரகமாஞ் சோம்பும் மருந்தாம்
நமனாங் கோழைக்கு நமனாகும் மிளகும், மூளையில் படர்ந்த கபமு மிளகும். சிரம் மண்ணாய் இறாமல் ஜீவியாகும்
பித்தந் தெளிவிக்குஞ் சீரகம்
சோம்பு, மிளகு, சீரகம் மூன்றும்
வாதம், கபம், பித்தம் இம்மும்மலம்
நீக்கும் மும்மூலம்
சுயமாங் கடுகு சிறுத்தாலும்
சுயம்பின் காரம் போகாது
வெங்காயத் தோல்களாம் வேடங்கள் பல பூண்டு, சுயம் வேடங்களும், அவற்றின் வாடைகளும் தான் எனத் தவறாய்க் கைக்கொண்டு, தன் உள்ளடக்கமாகிய சுயம்பு வெண் காயக் கற்கண்டு கொள்ள மறந்ததுவே!
பூண்டு கொண்ட வெங்காயம் உரிந்தால், அரிந்தால், ஆடைகளும் வாடைகளும் நீங்கிய சுயம், தன் நிர்வாணமே சுயம்பு வெண்காயம் என அறிந்தால், இருதய வாயில் கற்கண்டாய்க் கரைந்து போகும்
சுயமாம் நிலக் கடலை தன்னுள்
சுயம்பாம் வான்வெளிக் கடல் ஐ
சுயத்தின் குழம்பும் வாழ்வை
சுயம்பிற்கு அனுமதி தந்து
ரசமாய் இளக்காவிட்டால்
இறுகிய குழம்பு
இன்னும் இறுகி இறுகிப்
பேரிறுக்கமாகி சுயத்தையே
விழுங்கி ஏப்பம் விட்டு விடும்.
ராஜா அவர்களின் இப்பதிவின் உச்சம் அக்கடைசி வரிகளே.
கவனம்
சுயம்பின் ரச வாதத்துக்கு அனுமதி அளிக்கா விட்டால், கருந்துளைக் கருங்குழம்பில் சுயம் விழுங்கப்பட்டு அழிக்கப்படும்
குழம்பு இறுக்கம்
ரசம் இளக்கம்
பாயசம் பாய் என்ற வேரால் மலர்வெடியாகும் திறந்த அமைப்பைப் பாய்ந்து அனகமாய் விரியும் அருட்பெருஞ்ஜோதியைச் சுட்டுகிறது, கருங்குழம்புக் கருந்துளைக் கசப்பு நீக்கி இனிக்கிறது
வழமை போல் ராஜா அவர்களின் உள் அற அகவல் இனிதே!
No comments:
Post a Comment